வாழ்தலின்
நொடிகள் வழியே
வாப்பாவோடு பகிர்ந்த
நாட்களை நினைந்தழுது
பின்
தேற்றிக் கொள்ளத்தான்
முடிகிறது
புலன்கள் கடந்து
பரிமாணங்கள் கடந்து
பெயர் தெரியாத மரமொன்று
என்னுள்
வேர்கள் விரித்து
சிறகுகள் விரித்து
விரிந்து வளர்கிறது
எனது உயிர், விருப்பங்கள்
கிளிகளாகவும்
எனக்குப் பிடித்தமானவர்களின்
உயிர்கள், விருப்பங்கள்
மணிப்புறாக்களாகவும்
உனது நினைவுகள்
அறியப்படாத பறவையொன்றால்
நீண்ட காலமாக
அந்த மரத்தில்
அடைகாக்கப்பட்டும் வருகின்றன
கிளிகளுக்கு
சிறகு முளைத்துப் பறந்தால்
எனது முட்டைகளை
உன்னினைவுகளோடு
சேர்த்து வைக்கும்படி
மகனுக்குச் சொல்லியிருக்கிறேன்
அவன்-
உன்னினைவுகளையும்
நான் சுமக்கின்ற
ஒரு யுகத்தின் பாரத்தையும்
இறக்கி வைக்கப் போதுமானவன்
வாப்பா..!
என்றுதான் அழைக்கிறேன்
என் மாரில் தூங்கி
எனக்குப் புரியாத மொழிகளில்
தாலாட்டுகிறான்
நீ-தாலாட்டியதைப் போல்
Saturday, February 17, 2007
Subscribe to:
Posts (Atom)